திங்கள், 21 அக்டோபர், 2024

கொஞ்சம் சட்டம்; கொஞ்சம் அனுபவம்-1




இங்குதான் வரவேண்டுமா?

 வழக்கறிஞர்  ஆ. தமிழ்மணி


மே மாதம் பெற்றோர்களுக்கு இரண்டாவது பிரசவகாலம்.

தங்கள் பிள்ளைகள் பள்ளி இறுதி ஆண்டைக் கடக்கும்போதுஅடுத்து என்ன செய்வது?’ என்ற கேள்வி ஒவ்வொரு பெற்றோரையும் நிம்மதி இழக்கச் செய்துவிடுகிறது. பெற்றோரின் வலியை என்னால் அப்போது உணர முடிந்திருந்தது. தொழிற்கல்வியில் சேர்வதா? கலை, அறிவியல் கல்லூரியில் சேர்வதா?. குழப்பம் மாதக்கணக்கில் நீடித்தது.

நீண்ட பரிசீலணைக்குப் பிறகு ஏதாவது ஒரு கலை அறிவியல் கல்லூரியில் டிகிரி சேர்வது என்று முடிவெடுத்திருந்தேன். நான் முடிவெடுத்து கல்லூரியில் சேர்வதற்காக முயன்றபோது, கல்லூரியில் சேர்வதற்கான காலம் முடிந்து வகுப்புகள் நடைபெற்றுக் கொண்டிருந்தன.

1995-ஆகஸ்டு கடைசி வாரம். மணப்பாறையில் உள்ள குறிஞ்சி கலை அறிவியல் கல்லூரிக்கு அப்பா அழைத்துச் சென்றார். மேனேஜர் சந்திரசேகரைச் சந்தித்தோம்.

எந்த வகுப்பில் சேர்கிறீர்கள்?’ என்று கேட்டார்.

எதைக் கொடுத்தாலும் படிக்கிறேன் சார்என்றேன். இடம் கிடைத்தால் போதும் என்ற மனநிலைதான் அப்போது இருந்தது. கல்லூரி வகுப்புகள் தொடங்கி ஒரு மாதத்திற்கு மேல் ஆகிவிட்ட நிலையில், எதில் சேர்ந்தாலென்ன?

மேனேஜர் அங்கும் இங்கும் போனார். கடைசியில்மைக்ரோபயாலஜியில் சேர்ந்து கொள்ளுங்கள் என்றார். பயாலஜியைத் தாண்டி மைக்ரோபயாலஜி என அப்போதுதான் கேள்விப்பட்டேன். காலதாமதாமாக வந்ததற்காக ரெண்டாயிரம் ரூபாய் நன்கொடை கட்ட வேண்டும் என்றார். கட்டினோம். எனக்கான வருகைப்பதிவேடு முன்தேதியிட்டு போடப்பட்டது.

எந்தவித முன் விருப்பமும் இல்லாமல் சேர்ந்த பிரிவு என்றாலும், மைக்ரோபயாலஜி விருப்பமான பாடமாகவே இருந்தது. தனியார் கல்லூரி என்றாலும்கூட அரசுக் கல்லூரியைப் போலவே போராட்டமும், கதையுமாக சுவாராஸ்யமாகத்தான் வகுப்புகள் நகர்ந்தன.

பள்ளி நாள்களில் வானொலியில் செய்தி கேட்கும் பழக்கம் இருந்தது. மாநிலச் செய்திகளைவிட டெல்லியில் இருந்து ஒலிபரப்பாகும் அகில இந்திய செய்திதான் எனக்கு விருப்பமாக இருந்தது. “ஆக்காஸவானி செய்திகள் வாசிப்பது சரோஜ் நாராயண் ஸ்வாமி இந்தக் குரல் என்னை வெகுவாக ஈர்த்திருந்தது. உச்சரிப்பு அவ்வளவு தெளிவாக இருக்கும். அந்தக்குரல் ஆணா? பெண்ணா? என்று திடீர் சந்தேகம் வந்துவிட்டது. அகில இந்திய வானொலிக்கு ரிப்ளை கார்டு எழுதியிருந்தேன். She is female என பள்ளி முகவரிக்கு பதில் வந்துதலைமை ஆசிரியர் புலவர். தங்கவேல் என்னை அழைத்து விசாரித்தார்.

டெல்லியில் இருந்து வானொலியில் ஒலிபரப்பாகும் தமிழ் செய்தியில் மூன்றாவது தலைப்புச் செய்தியாக எப்போதும் ஈழம் பற்றிய செய்தி இருக்கும். “புலிகள் தாக்கியதில் நான்கு இலங்கை ராணுவத்தினர் கொல்லப்பட்டனர் , “ராணுவ ஹெலிக்காப்படர்கள் குண்டு வீசியதில் பள்ளிக்குழந்தைகள் கொல்லப்பட்டனர் போன்ற செய்திகள் என்னை அப்போது வெகுவாகப் பாதித்திருந்தது.

60-களில் இருந்து அப்பா தினமணி வாசகர். தினமணி நாள்தோறும் கண்ணில் படும். வானொலிப்பெட்டி மற்றும் தினமணி நாளிதழ் வாயிலாகத்தான் வெளிஉலகைப் பார்த்தேன்.

வீடுகளில் தொலைக்காட்சிப் பெட்டி அப்போது கிடையாது. எங்கள் இராஜாளிப்பட்டி கிராமத்திற்கே ஒரே ஒரு தொலைக்காட்சிப் பெட்டிதான் இருந்தது. பஞ்சாயத்து அலுவலகத்தில் வைத்து பூட்டி வைத்திருப்பார்கள். வெள்ளிக்கிழமை ஒளியும் ஒலியும் பார்ப்பதற்கும், ஞாயிற்றுக்கிழமை திரைப்படம் பார்ப்பதற்கும் 11 பட்டி கிராமமே திரண்டு வரும்.

அப்போது தினமணியில், நந்தன் பத்திரிக்கை தொடங்குவது பற்றிய விளம்பரம் வந்தது. அந்தப் பத்திரிக்கையின் செய்தியாளராக என்னை நியமிக்குமாறு நான் ஒரு கடிதம் எழுதினேன். நீங்கள் கல்லூரி மாணவராக இருப்பதால் இந்தப் பணியை செய்ய இயலாது. நீங்கள் நந்தன் வாசகராக இருக்கலாம் என்று ஒரு பதில் கடிதம் நந்தன் அருணாசலம் அவர்களிடம் இருந்து வந்தது.

இளங்கலை முடிப்பதற்குள் எனது எண்ணமும் சிந்தனையும் முழுமையாக மாறியிருந்தது. ஆனாலும் பெற்றோர்களின் எண்ண ஓட்டத்திற்கு மாறாக நான் எந்த முடிவையும் எடுக்கவில்லை.

செய்திகள், கட்டுரைகள் என ஒரு பொதுத்தளத்திற்கு விரைந்து இழுக்கப்பட்டேன். நான் இளங்கலை மைக்ரோபயாலஜி படித்துக்கொண்டிருந்த காலத்தில், அந்தப் படிப்பிற்கு அதிக அளவில் வேலைவாய்ப்புகள் இருந்தன. குறிப்பாக மருத்துவத்துறை, உணவுப் பதப்படுத்தும் துறை ஆகியவற்றில் அதிக அளவில் வேலைவாய்ப்புகள் இருந்தது.

டிகிரி முடித்தவுடன் எம்.எஸ்.ஸி படித்தால் நல்ல வேலைக்குப் போய்விடலாம் என சக மாணவ, மாணவியர்கள் முடிவெடுத்து எந்தக் கல்லூரியில் சேர்வது என விவாதித்துக் கொண்டிருந்தபோது, என் மனம் மட்டும் வேறு துறையைப் பற்றியே சிந்தித்தது. அது நமது குடும்பப் பொருளாதாரத்திற்கு ஏற்றதாக இருக்குமா? என்ற கேள்வியும் என்னை உறங்கவிடாமல் செய்தது.

பனிரெண்டாம் வகுப்பிற்குப் பிறகு எந்தத் துறையைத் தேர்ந்தெடுத்துப் படிப்பது என்று எழுந்த குழப்பத்தைவிட, டிகிரிக்குப் பிறகு என்ன செய்வது என்ற குழப்பம் சற்று அதிகமாகவே இருந்தது.

குழப்பம் என்பதைக்காட்டிலும், அப்பா அம்மாவின் கடுமையான உழைப்பை மேலும் காவு வாங்கிவிடக்கூடாது, அவர்களுக்கு ஏதாவது ஒரு வகையில் உதவியாக இருக்க வேண்டும் என்ற எண்ணம்தான் எனது குழப்பத்திற்குக் காரணமாயிற்று.

உடனடியாக வேலைக்குச் செல்லும் வகையான மேற்படிப்பா? அல்லது பொதுத் தளத்தில் இயங்குவதற்குத் தேவையான கல்வியா? என்று முடிவெடுக்க வேண்டிய கட்டாயத்திற்கு வந்தேன்.

இறுதியில் பொதுத் தளத்தில் இயங்குவதற்கும் கருத்துக்களை வெளியிடுவதற்கும், நமக்கு நாமே ஒரு பாதுகாப்பை உருவாக்கிக்கொள்ள வேண்டும் என்ற முடிவுக்கு வந்தேன். நான் தேர்ந்தெடுத்த பாதை சற்று சிரமமானது என்று தெரிந்தேதான் முடிவு எடுத்தேன். சக நண்பர்கள் எம்.எஸ்.சி மைக்ரோபயாலஜியில் சேர்ந்தபோது, நான் சட்டக்கல்லூரியில் சேர்வது என்று முடிவு செய்தேன். என்னை சார்ந்தவர்களுக்கு அது அதிர்ச்சியாகவும் ஆச்சரியமாக இருந்தது.

அம்மாவும் அப்பாவும் சற்றுத் தயக்கத்துடனையே ஆமோதித்தார்கள். அதுவரை நான் அவர்கள் விருப்பத்திற்கு மாறாக எதுவும் செய்ததில்லை. இதுதான் வேண்டும் என்று கேட்டதும் கிடையாது. சட்டக்கல்லூரிக்கு விண்ணப்பம் செய்து நுழைவுத்தேர்வையும் எழுதிவிட்டேன். முதலில் வெளியான தேர்வுப் பட்டியலில் எனக்கு இடம் கிடைக்கவில்லை. இரண்டு மாதம் கழித்து காத்திருப்போர் பட்டியலில் இருந்து எனக்கு அழைப்பு வந்தது. மூன்றாண்டு சட்டப்படிப்பு. மதுரை சட்டக்கல்லூரியில் இடம் ஒதுக்கப்பட்டிருந்தது.

நானும் அப்பாவும் மதுரைக்குப் புறப்பட்டுப்போய்ச் சேர்கிறோம். மதுரை நகருக்குள் அப்போதுதான் முதல் முறையாக நுழைகிறேன். சட்டக் கல்லூரி வளாகத்திற்குள் சென்று சேர்ந்தபோதுஒரு மதிப்பு மிக்க இடத்திற்கு வந்தடைந்து விட்டதாகவே நினைத்துக்கொண்டேன். என்னைப்போலவே அங்கு இருந்த அனைவரும் ஏதோ ஒன்றை சாதித்துவிட்டதைப்போல முக மலர்ச்சியுடன் காணப்பட்டார்கள். வகுப்புகள் நடைபெற்றுக்கொண்டிருந்தன.

ஒரே ஒரு நோட்டை கையில் பிடித்துக்கொண்டு மாணவர்கள் கூட்டம் கூட்டமாக வருவதும் போவதுமாக இருந்ததைப் பார்த்தபோது மனம் சிறகடித்துப் பறந்தது. சேர்க்கைக்காக அலுவலக வாயிலில் நின்று கொண்டிருந்தேன். பேராசிரியர் ராதாகிருஷ்ணன் நாயர் சான்றிதழ்களை சரிபார்த்தார். சான்றிதழ்களை திருப்பித்திருப்பி பார்த்தார். என் முகத்தைப் பார்த்துஎதுக்காக லா காலேஜ் வந்தீங்க?, மைக்ரோபயாலஜி படித்துவிட்டு இங்குதான் வரவேண்டுமா?’ என்றார். பதில் சொல்ல முடியாமல் விழித்து நின்றேன். அப்பாவின் முகம் சற்று மாறிவிட்டது.

எதற்காக அப்படிக் கேட்டார் என்பதற்கான அர்த்தம் எனக்கு அன்று புரியவே இல்லை.

கொஞ்சம் சட்டம்; கொஞ்சம் அனுபவம்-2

 



கடைசிப் புகலிடமா?

- வழக்கறிஞர்  ஆ. தமிழ்மணி


மூன்றாண்டு சட்டப்படிப்பிற்கான வகுப்புகள் மதியம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. 100 மாணவர்கள் சேர்க்கப்பட்டிருந்தனர். இராஜாளிப்பட்டி கிராமத்திலிருந்து 100 கிலோ மீட்டர் தூரம் பேருந்துப் பயணம். மாட்டுத்தாவணியில் இருந்து இரண்டு கிலோமீட்டர் தூரம் கல்லூரிக்கு நடந்து போய் வந்து கொண்டிருந்தேன்.

ஒவ்வொரு பாடத்திற்கும் டெக்ஸ்ட் புக் வாங்கிப் படித்தால் வழக்கறிஞராகப் பணிசெய்யும்போது பெரும் உதவியாக இருக்கும். கல்லூரியைவிட்டு வெளியே போய்விட்டால் டெக்ஸ்ட் புத்தகங்களைப் படிக்க நேரம் இருக்காது என்று ஒவ்வொரு பேராசிரியரும் அறிவுறுத்தியிருந்தனர். தமிழில் புத்தகங்கள் கிடையாது என்பதால் பேராசிரியர்கள் பரிந்துரை செய்த ஆங்கிலப் புத்தகங்களை வாங்கிவிட்டேன். கையில் ஒரே ஒரு நோட்டுடன்தான் பலரும் வகுப்பிற்கு வந்தனர்.

ஆனால் பெரும்பாலான மாணவர்கள் புத்ததகங்கள் வாங்கவே இல்லை. தேர்வு வரும்போது சுஜாதா கைடையோ அல்லது ஜெயராஜன் தமிழ் கைடையோ படித்து தேர்ச்சி பெற்றுவிடலாம் என்று சொல்லிக்கொண்டிருந்தனர். தமிழ்நாடு முழுவதும் பெரும்பாலான மாணவர்கள் அப்படித்தான் தேர்வு எழுதினார்கள்.

ஒரு மாதம் முடிந்திருந்தது. பேருந்துப் பயணம் சுமையாகத் தெரிந்தது. இரண்டாவது மாதம் தொடங்கும்போதே இடுப்பு வலி வந்துவிட்டது. தினமும் பேருந்து கட்டணம் செலவழிப்பது ஒரு சுமையாக இருந்தாலும், இடுப்பு வலி புதிய அச்சத்தை ஏற்படுத்தியது. திருச்சி மதுரை நான்கு வழி தேசிய நெடுஞ்சாலையெல்லாம் கிடையாது. தினந்தோறும் பேருந்தில் பயணித்து வகுப்புக்குச் சென்று வருவது என்பது சிரமமாக இருந்தது. கல்லூரிக்குப் போகாமல் இருக்கவும் மனம் இடம் தரவில்லை.

அனைத்து வகுப்புகளுக்கும் வரவேண்டும் என்பதெல்லாம் கட்டாயம் இல்லாத சூழல்தான் இருந்தது. கல்லூரிக்கு வருபவர்களும் வெளியில் சுற்றிக்கொண்டுதான் இருந்தார்கள். வருகைப்பதிவேடு எடுக்கும் போது சாரியாக உள்ளே நுழைவார்கள். வராதவர்களுக்கும் பிராக்ஸி அட்டெண்டன்ஸ் கொடுப்பார்கள். இவை அனைத்தும் பேராசிரியர்களுக்கும் தெரியும்.

அந்த ஆண்டு தீபாவளிக்கு முதல்நாள் வழக்கம் போல கல்லூரிக்குச் சென்றேன். வகுப்பில் யாருமே இல்லை. ஒருவேளை விடுமுறை அறிவிக்கப்பட்டது தெரியாமல் இவ்வளவு தூரம் வந்துவிட்டோமோ? என்று முதல் மாடிக்குச் சென்று அறிவிப்புப் பலகையைப் பார்த்தேன். அப்படி எந்த அறிவிப்பும் இல்லை. அலுவலகத்திற்குச் சென்று பணியாளரிடம் விசாரித்தேன். “இன்னைக்கெல்லாம் எதுக்கு சார் வர்றீங்க என்று சொல்லிவிட்டு ஏதோ பேப்பர்களை புரட்டிக்கொண்டிருந்தார். போன அடி மாறாமல் திரும்பி ஊருக்கு வந்துவிட்டேன். எத்தனை நாளைக்கு இப்படி போய்வருவது.

விடுதியில் சேர்வது பற்றி நான் நினைத்துக்கூடப் பார்க்கவில்லை. அதுவரை வீட்டைவிட்டு வெளியில் தங்கிப் பழக்கமில்லாமல் இருந்தது. வேறு வழியின்றி, மதுரையில் இருந்து திருச்சி அரசு சட்டக்கல்லூரிக்கு மாறுதல் கேட்டு விண்ணப்பம் செய்தேன். அதன் நகலை அப்பாவிடம் கொடுத்திருந்தேன். தலைமைச் செயலகத்தில் கால்நடைத்துறையில் பணியில் இருந்த தனது நண்பர் சீனிவாசனிடம் கல்லூரி மாறுதல் வேண்டும் என்று அப்பா சொல்லி வைத்திருந்தார்.

சீனிவாசன் அதற்கான ஏற்பாடுகளையெல்லாம் செய்வார் என்று நான் கருதவில்லை. மாறுதல் கிடைத்தால் நல்லது என்றுதான் நினைத்துக் கொண்டிருந்தேன். 20 நாட்களுக்குள் மதுரை சட்டக் கல்லூரியில் இருந்து திருச்சி சட்டக்கல்லூரிக்கான மாறுதல் அளிக்கப்பட்டு எனக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

மதுரை சட்டக்கல்லூரிக்கும் திருச்சி சட்டக்கல்லூரிக்கும் நிர்வாகத்தில் பெரிய மாறுதல் எல்லாம் இருந்ததாக எனக்குத் தெரியவில்லை. மணப்பாறை வழியாக தொடர்வண்டியில் திருச்சிக்கும், அங்கிருந்து கல்லுக்குழி ரயில்வே காலணி வழியாக சட்டக்கல்லூரிக்கும் சென்று வந்து கொண்டிருந்தேன். திருச்சியில் மூன்றாண்டு சட்டப்படிப்பிற்கான வகுப்புகள் காலையில் நடைபெற்றது. மத்திய மாநில அரசுகளுக்கு எதிரான போராட்டங்கள், வகுப்புப் புறக்கணிப்புகள், குழு மோதல்கள் என மூன்றாண்டுகளும் அமர்க்களப்பட்டிருந்தது.

எல்லா மாணவர்களும் அரசியல் வயப்பட்டிருந்தனர். வகுப்புகளுக்கு கட்டுப்பாடுகள் இல்லாமல் இருந்தது எனக்கு ஏமாற்றமாகவே இருந்தது.

பள்ளி இறுதித் தேர்வில் முதலிடம் பெற்ற மாணவ மாணவியர்கள் யாரும்நான் சட்டக்கல்லூரியில் சேர்வேன் என்று பேட்டி கொடுத்ததாக எந்தச் செய்தியையும் நான் பார்த்ததில்லை. அரசு சட்டக்கல்லூரிகள் மீது அந்த அளவிற்குத்தான் பொது மக்களிடம் மரியாதை இருந்தது.

மருத்துவம், பொறியியல் என்று எங்கும் இடம் கிடைக்காதவர்கள் அல்லது அவ்வாறு பெற்றோர் விரும்பியிருந்து அதற்கு வாய்ப்பில்லாமல் சட்டக்கல்லூரிக்கு வந்தவர்கள் என இப்படித்தான் பெரும்பாலான மாணவர்கள் சட்டக் கல்லூரிக்கு வந்தனர். தேடியன கிடைக்காதவர்களின் புகழ் இடமாகவும், புகலிடமாகவும் சட்டக்கல்லூரி விளங்கியது.

சிலர் தனது குடும்பத்தில் உள்ள வழக்குகளை தீர்த்துவிடுவோம் என்ற நம்பிக்கையிலும், சிலர் அரசியலில் பிரகாசிக்க வேண்டும் என்றும், சிலர் தனது கொள்கைவழிப்பட்ட பணயத்தில் ஒரு பாதுகாப்பு வேண்டும் என்பதற்காகவும்தான் சட்டக்கல்லூரிக்கு வந்திருந்தனர். ஒன்றிரண்டு பேர் அப்பாவின் தொழிலைத் தொடர வேண்டி வந்திருந்தனர். சம்பாதித்துவிடுவோம் என்ற நம்பிக்கையில் வந்ததாக நான் யாரையும் காணவில்லை.

சட்டக்கல்லூரியில் கற்றுக் கொண்டதற்கும் நடைமுறை நீதிமன்றப் பணிகளுக்கும் எந்தத் தொடர்பும் இல்லாமல்தான் இருந்தது. இன்றைக்கு பி.எல். ஹானர்ஸ், நேசனல் லா ஸ்கூல் என வந்தபிறகு சட்டக்கல்லூரி மீதான பார்வையும் மதிப்பும் உயர்ந்திருக்கிறது. இங்கு படித்தால் உருப்படலாம் என பெற்றோர்களுக்கும் நம்பிக்கை வந்திருக்கிறது.

மருத்துவம் படித்துவிட்டு வெளியே வரும் ஒருவரால் ஒரு நோயாளிக்கு சிகிச்சை அளிக்க முடியும். பொறியியல் படித்த ஒரு பொறியாளரால் அவர் சார்ந்த வேலையைச் செய்துவிட முடியும். ஆனால் சட்டம்படித்து விட்டு வரும் ஒரு வழக்கறிஞரால் உடனடியாக ஒரு வழக்கை நீதிமன்றத்தில் சுயமாக முன்னெடுக்க முடியாது. சட்டக்கல்வி அதற்கான பயிற்சியைத் தரவில்லை.

வழக்கறிஞராகப் பதிவு செய்து கொண்டு வெளியே வந்தவுடன் தனியாக ஒரு அலுவலகத்தைப் போட்டு உட்கார முதலில் தைரியம் வேண்டும். அப்படியே போட்டு உட்கார்ந்தாலும் யார் வழக்குக் கொடுப்பார்கள்? அப்படியே வழக்குக் கொடுத்தாலும் அதை எப்படி அணுக வேண்டும் என்பதெல்லாம் இளம் வழக்கறிஞர்களுக்குத் தெரியுமா? என்ற கேள்விகள் பிரதானமாக தொக்கி நிற்கின்றன. பத்தாண்டுகள் கடந்த வழக்கறிஞர்கள்கூட சுயமாக நிற்க முடியாத சோகங்கள்தான் தற்போதும் தொடர்கிறது.

மைக்ரோபயலாஜி படிக்கும் போதுஅரியரிலர்லா மனிதன் அரை மனிதன் என்று பேசிக்கொண்டு தேர்வு பயமே இல்லாமல் மாணவர்கள் தேர்வு எழுதுவதை பாத்திருக்கிறேன். அப்போதெல்லாம் இல்லாத பதட்டம் எனக்கு சட்டக்கல்லூரி இறுதி ஆண்டு தேர்வு எழுதும் போது வந்தது.

அரியர் விழுந்துவிட்டால் நம்மைப்பற்றி என்ன நினைப்பார்கள், அப்பா, அம்மா என்ன நினைப்பார்கள், உறவினர்கள் நண்பர்கள் என்ன நினைப்பார்கள் என்ற பதட்டம் எனக்கு சட்டக்கல்லூரி இறுதி ஆண்டு தேர்வறையில் வந்தது. அந்த பதட்டத்திலேயே தொழிலாளர் சட்டத்தில் எனக்கு அரியர் வந்துவிட்டது. ஆறுமாதம் தாமதமாகத்தான் நான் வழக்கறிஞராகப் பதிவு செய்ய முடிந்தது. எதையும் தைரியமாக அணுகினால் தான் வெற்றி கிடைக்கும் என்பதை நான் இங்கிருந்துதான் முதலில் கற்றுக்கொண்டேன்.

வழக்கறிஞராகப் பதிவு செய்தவுடன் திருச்சியில் மூத்த வழக்கறிஞர் எஸ்.ஆர்.ஆர்.ராஜீலு அவர்களிடம் இளம் வழக்கறிஞராகப் பணியில் சேர்ந்தேன். அப்போது உரிமையியல் சட்டத்தில் கொண்டுவரப்பட்ட திருத்தம் தொடர்பாக மாநிலம் முழுவதும் வழக்கறிஞர்கள் தீவிரமாகப் போராடிக்கொண்டிருந்தனர். நீதிமன்றப்பணிகள் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டது. நாடு முழுவதுக்குமான போராட்டமாக இருந்த போதிலும் திருச்சியில் போராட்டம் வீரியமாக நடைபெற்று வந்தது. வழக்கறிஞர்கள் சங்க அலுவலகத்தை காலி செய்ய வேண்டும் என்றெல்லாம் அறிவிப்பு அனுப்பப்பட்டிருந்தது.

மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் என்பார்கள். அதைப்போலத்தான் சீனியர் வழக்கறிஞர் அமைவதும். வாழ்வும் தாழ்வும் அங்கிருந்துதான் தொடங்குகிறது. வழக்கறிஞராகப் பதிவு செய்த நாளில் இருந்து வீட்டில் பணம் வாங்குவதில்லை என்று முடிவு செய்திருந்தேன். அலுவலகத்திலும் ஊதியம் என்றெல்லாம் ஒன்று இல்லை.

எதுக்காக சட்டக்கல்லூரிக்கு வந்தீங்க?, மைக்ரோபயாலஜி படித்துவிட்டு இங்குதான் வரவேண்டுமா?’ என்று மூன்றாண்டுகளுக்கு முன்பு சட்டக் கல்லூரியில் சேரும்போது, பேராசிரியர் ராதாகிருஷ்ணன் நாயர் கேட்ட கேள்விக்கான விடை வழக்கறிஞராக நீதிமன்றத்திற்குச் சென்றபோதுதான் எனக்குக் கிடைத்தது.

வழிச்செலவுக்குக் காசில்லாமல் வழக்கற்றுப் போனவர்களின் கதையை சிறிய வயதில் கேட்டிருக்கிறேன். ஆனால் வழக்கறிஞருக்கே காசில்லாமல் போனால் என்ன செய்வது?.

எப்படியும் நின்று நிலைத்துவிட வேண்டும் என்ற உறுதியோடு, உடனடியாக ஒரு அலுவலகத்தை தொடங்குவது என்று முடிவு செய்திருந்தேன்.